இறுதி சடங்கில் தகராறு; நபருக்கு கத்திக்குத்து – 3 பேர் கைது

0
2

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இறுதி சடங்கின்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்திக்குத்துக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த சூர்யகுமார் (27) மதுபோதையில் வந்து தேவையற்ற தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு இருந்த கோபாலகிருஷ்ணன் (41), இறுதி சடங்கு நடைபெறும் இடத்தில் பிரச்சினை செய்ய வேண்டாம் என சூர்யகுமாரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சூர்யகுமார் தனது உறவினர்கள் மூவருடன் சேர்ந்து கோபாலகிருஷ்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் ஏற்பட்ட மோதலில், கோபாலகிருஷ்ணன் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தார்.

அவரை அப்பகுதியினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது கோபாலகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் செம்மஞ்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது