தமிழ் சினிமாவில் ‘வாரணம் ஆயிரம்’, ‘அசல்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை சமீரா ரெட்டி, நீண்ட 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றவுள்ளார். ஆர்.எஸ்.எஸ் (RSS) இயக்கத்தின் வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘ஆக்ரி சவால்’ (Aakhri Sawal) என்ற திரைப்படத்தின் மூலம் அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார்.
2002-இல் இந்தியில் அறிமுகமாகி சூர்யாவுடன் ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் சமீரா ரெட்டி. அஜித்துடன் ‘அசல்’, மாதவன்-ஆர்யாவுடன் ‘வேட்டை’ என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த அவர், 2013-இல் கன்னடப் படத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.
2014-இல் அக்ஷய் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது அபிஜீத் மோகன் வாரங் இயக்கத்தில் சஞ்சய் தத் நடிக்கும் ‘ஆக்ரி சவால்’ படத்தில் ஒரு வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தனது ரீ-என்ட்ரி குறித்துப் பேசிய சமீரா ரெட்டி, “நான் ஏதோ ஒரு பாதுகாப்பான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மீண்டும் சினிமாவுக்கு வரவில்லை; ஆர்.எஸ்.எஸ் குறித்து எனக்கு இருந்த அரைகுறை தகவல்கள் இந்தப் படத்தின் திரைக்கதையைப் படித்த பிறகு முற்றிலும் மாறின.
நான் உண்மையாக நம்பிய பல விஷயங்களைக் கேள்வி கேட்கும் விதமாக இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது,” எனத் தெரிவித்துள்ளார். திரிதா சவுத்ரி, அமித்சாத் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வரலாற்றை மிகத் துல்லியமாகப் பேசும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





