பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்களில் ஒரு மாணவி உட்பட 11 கல்லூரி மாணவர்களை செங்கல்பட்டு நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்தது.
பொத்தேரியில் இயங்கும் பிரபல தனியார் கல்லூரியில் தமிழகம் மட்டுமில்லாமல் பல வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரி விடுதிகள் மட்டுமின்றி அருகில் இருக்கும் பிற தனியார் விடுதிகள் மற்றும் அப்பகுதியில் தனியாக வீடு எடுத்தும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் கல்லூரி பகுதியில் அதிகளவு பான் மசாலா, குட்கா, கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருள் புழக்கம் மாணவர்களிடையே அதிகளவில் இருப்பதாக போலீசாருக்கு தொடந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து நேற்று அதிகாலையிலேயே மகளிர் போலீஸ் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் கல்லூரி பகுதியில் குவிக்கப்பட்டனர்.
கல்லூரி விடுதியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ஒரு மாணவி உட்பட 19 மாணவர்கள், மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான செல்வமணி மற்றும் ஒருவர் என 21 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சோதனையில் அரை கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட், 20 கஞ்சா ஆயில், 5 கஞ்சா பாக்கு, போதை பானை 1, 7 ஹூக்கா இயந்திரங்கள், 6 கிலோ ஹூக்கா பவுடர் உள்ளிட்ட போதைப்பொருட்களும், 60 பைக்குகள் மற்றும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது போதை பொருட்கள் எங்கு கிடைக்கிறது? எப்படி கிடைக்கிறது? யார் விற்பனை செய்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கைதானவர்களில், ஒரு மாணவி உள்பட 11 கல்லூரி மாணவர்களை செங்கல்பட்டு நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்தது. இவர்களுக்கு போதைப் பொருள் விநியோகித்த 3 பேரை 15 நாட்கள் காவலில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்தி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





