இந்தியா முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ள நிலையில், செங்கல்பட்டில் எங்கெங்கு முகாம் நடைபெறவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 28வது ஆண்டாக இந்த ஆண்டும் வருகிற 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,288 மையங்களில் சுமார் 2,38,231 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர நலவாழ்வு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த முகாமில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர்கள் ஆக மொத்தம் 4361 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா ஆகிய இடங்களில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து கட்டுமான பணிக்காக வந்துள்ள பணியாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை தனியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கும் 24 சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, போலியோ நோயை ஒழிக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கும்படி மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.








