Home செங்கல்பட்டு பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம்

பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம்

0

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகிலுள்ள அனுமந்தபுரம் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பல்லவர் கால குடைவரைத் திருத்தலமான அருள்மிகு அஹோபிலவல்லி தாயார் சமேத பாடலாத்ரி நரசிம்மபெருமாள் திருக்கோவிலில் இந்த ஆண்டிற்கான வைகாசி பிரம்மோற்சவ பெருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்தப் பழமையான திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவமும், தொடர்ந்து 3 நாட்கள் விடையாற்றி உற்சவமும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், அதிகாலை முதலே கோவில் வளாகம் பக்தி பரவசத்தில் திளைத்தது.

விழாவை முன்னிட்டு அதிகாலை வானவேடிக்கை, மங்கள இசை, வேத மந்திர ஓசைகள் முழங்க கொடிமரத்தில் புனித கொடி ஏற்றப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் உற்சவர் ஸ்ரீ பிரகலாத வரதர் த்வஜாரோஹண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் போது தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வர உள்ளார். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவை உற்சவம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், வரும் மே 25ஆம் தேதி மாலை யானை வாகன உற்சவமும், மே 27ஆம் தேதி காலை மகா தேரோட்டமும் சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. விழாவையொட்டி சிங்கபெருமாள் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version