அரைகுறை வடிகால்வாய் பணியால் நரப்பாக்கம் மக்கள் அவதி

0
9

திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நரப்பாக்கம் ஊராட்சியில் அரைகுறையாக நிறுத்தப்பட்ட வடிகால்வாய் பணிகளால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உடனடியாக பணிகளை முழுமைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட நரப்பாக்கம் மற்றும் அகத்தீஸ்வரமங்கலம் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழைக்காலங்களில் கழிவுநீர் தேக்கம் மற்றும் சுகாதார பிரச்சினைகள் அதிகமாக இருந்ததால், கடந்த ஆண்டு 100 மீட்டர் தூரத்திற்கு வடிகால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

ஆனால் 300 மீட்டர் நீளமுள்ள தெருவில் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக பாடசாலை குறுக்குத்தெரு தரைப்பாலம் பகுதியில் இருந்து தொடங்கிய வடிகால்வாய், இந்திரா காந்தி தெருவுடன் இணைக்கப்பட வேண்டிய நிலையில் தற்போது பணி முடிக்கப்படாமல் உள்ளது.

இதனால் வடிகால்வாயில் செல்ல வேண்டிய கழிவுநீர் வீடுகளின் முன்பாக தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் மற்றும் கொசு தொல்லை அதிகரித்துள்ளதுடன், குடியிருப்புவாசிகள் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்படுகிறது என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழைக்காலங்களில் நிலைமை மேலும் மோசமடையும் அபாயம் இருப்பதாகவும், சுகாதார பாதிப்புகள் உருவாகும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, அரைகுறையாக நிறுத்தப்பட்ட வடிகால்வாய் பணிகளை முழுமையாக முடித்து கழிவுநீர் சீராக செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.