செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆனால் அமைச்சர் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்ததால் அரசு அதிகாரிகள் கடும் அவதியடைந்தனர்.
அமைச்சர் வருகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் முன்கூட்டியே கிடங்கு வளாகத்தில் காத்திருந்தனர். கடும் வெயிலிலும் அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தாமதமாக வந்த அமைச்சர் வெங்கடரமணன், கிடங்கின் செயல்பாடுகள் மற்றும் உணவுப் பொருட்கள் சேமிப்பு நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது செய்தியாளர்கள், தமிழக அரசியலில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைந்திருப்பது குறித்து பாமக தலைவர் அன்புமணி முன்வைத்த விமர்சனங்கள் தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். குறிப்பாக “இது ஜனநாயக படுகொலை” என அன்புமணி கூறியுள்ள நிலையில், அதற்கு அரசின் பதில் என்ன என நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வெங்கடரமணன், “நாம் இப்போது எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைப் பற்றி மட்டும் பேசலாம்” என்று கூறி அரசியல் கேள்விக்கு நேரடி பதில் அளிக்காமல் நாசூக்காக தவிர்த்தார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், அதிகாரிகளை நீண்ட நேரம் காத்திருக்க வைத்தது குறித்தும் பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.





