செங்கல்பட்டு அருகே உள்ள வேண்பாக்கம் – மணப்பாக்கம் சாலை பல இடங்களில் சேதமடைந்து போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுத்தி வருவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு அடுத்த வேண்பாக்கம் முதல் மணப்பாக்கம் வரை சுமார் 6 கிலோமீட்டர் நீளமுடைய இந்த சாலை, ஒழலூர், மணப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களின் முக்கிய போக்குவரத்து பாதையாக உள்ளது. செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தினசரி பயணம் செய்யும் பொதுமக்கள் இந்த சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், மணப்பாக்கத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கன்னியம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவதால், இந்த சாலையில் வாகன போக்குவரத்து எப்போதும் அதிகமாக காணப்படுகிறது.
பகுதி மக்களின் கூற்றுப்படி, சில மாதங்களுக்கு முன்பு மணப்பாக்கம் ஏரியில் இருந்து டாரஸ் லாரிகள் மூலம் அதிகளவில் மண் எடுத்துச் செல்லப்பட்டதால் சாலை பல இடங்களில் கடுமையாக சேதமடைந்துள்ளது. குறிப்பாக ஒழலூர் மற்றும் மணப்பாக்கம் பகுதிகளில் பள்ளங்கள் உருவாகி வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன.
சேதமடைந்த பகுதிகளில் பெயரளவிற்கு மட்டுமே ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விபத்துகளில் சிக்குவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் பெரிய அளவிலான விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கும் வாகன ஓட்டிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
