செங்கல்பட்டு அருகே இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்த இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மலாலிநத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜா (34), நேற்று முன்தினம் இரவு திருக்கழுக்குன்றத்தில் இருந்து தனது சொந்த ஊரான மலாலிநத்தத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆசிரியர் நகர் பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ராஜா பலத்த காயமடைந்தார். சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் வழிப்போக்கர்கள் உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை ராஜா உயிரிழந்தார். இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
