செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சமூக நலத்துறையில் ஊர்நல அலுவலராக பணியாற்றி வந்தவர் விஜயலட்சுமி (50). அரியனூர் கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண், அரசு சார்பில் வழங்கப்படும் இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டிருந்த வைப்புத் தொகையை புதுப்பிக்க அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அப்போது, அந்த தொகையை ரினியூவல் செய்து தர ரூ.1,000 லஞ்சமாக தர வேண்டும் என விஜயலட்சுமி கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் வழங்க விருப்பமில்லாத மகாலட்சுமி, இதுகுறித்து செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மகாலட்சுமியிடம் வழங்கி, அலுவலகத்திற்குள் அனுப்பினர். மகாலட்சுமி பணத்தை விஜயலட்சுமியிடம் கொடுத்த உடனே, மறைந்து கண்காணித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது ரசாயனம் தடவிய பணத்தை பெற்றுக்கொண்டது உறுதியானதால், பெண் அலுவலர் விஜயலட்சுமி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





