Home Local லாரி மீது கார் மோதி 4 பேர் உயிரிழப்பு – மதுராந்தகத்தில் சோகம்

லாரி மீது கார் மோதி 4 பேர் உயிரிழப்பு – மதுராந்தகத்தில் சோகம்

0

மதுராந்தகம் அருகே நடைபெற்ற கொடூர கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர், கார் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து திருச்சிக்கு கண்டெய்னர் மூலம் இரும்பு கம்பிகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது சென்னை விமான நிலையத்திலிருந்து பண்ருட்டிக்கு  காரில் தாய் ஜெய் பினிஷா (40), மகன்கள் மிஷால் (20), அக்தல் (16), பைசல் (12) கார் ஓட்டுநர் சரவணன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர்.

அதிவேகமாக வந்த கார் கம்பிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி மீது  மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் காரில் பயணம் செய்த ஜெய் பினிஷா, மிஷால், அக்தல், கார் ஓட்டுநர் சரவணன் ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காரில் சிக்கி இருந்த 4 பேரின் உடல்களை மீட்டனர். பின்னர், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மதுராந்தகம் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பைசல் (12) செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version