Home லைஃப்ஸ்டைல் ஆன்மிகம் சிங்கப்பெருமாள் கோயில் கருட சேவை – கோவிந்தா முழக்கமிட்ட பக்தர்கள்

சிங்கப்பெருமாள் கோயில் கருட சேவை – கோவிந்தா முழக்கமிட்ட பக்தர்கள்

0

செங்கல்பட்டு நரசிம்ம பெருமாள் கோயிலில் கருட சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

சிங்கபெருமாள் கோயில் – அனுமந்தபுரம் சாலையில் 100 ஆண்டுகள் பழமையான பாடலாத்திரி நரசிங்கப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. புண்ணியகோடி விமானத்தில் உற்சவர் பிரகலாதவரதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் 4 மாடவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2ஆம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு ஹம்ஸ வாகனத்திலும் வீதியுலா வந்து அருளினார்.

தொடர்ந்து 3ஆம் நாளான இன்று கருடசேவை உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. கருடசேவை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மஞ்சள் நிற பட்டு உடுத்தி, வாசனை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த நிகழ்வில் சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்த்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி வீதி உலா வந்த பொழுது பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என முழக்கமிட்டு வழிபாடு செய்தனர்.

NO COMMENTS

Exit mobile version