நில உரிமையாளர்கள், தங்களது நிலங்களை அளவீடு செய்ய, இணைய வழியிலேயே விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நில உரிமையாளர்கள், தங்களது நிலங்களை அளவீடு செய்ய, சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல்,
https://tamilnilam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு, நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இப்புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் நில அளவை செய்ய, எந்நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும், நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த, வங்கிகளுக்கு செல்ல வேண்டியதில்லை. இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நில அளவை செய்யப்படும் தேதி, மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது மொபைல் போன் வாயிலாக தெரிவிக்கப்படும்.
நில அளவை செய்யப்பட்ட பின், மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை, மனுதாரர் https://eservices.tn.gov.in என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில், நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும், இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
