கிளாம்பாக்கம் பேருந்து நிலைய தங்கும் அறை கட்டணம் உயர்வு.. பயணிகள் கடும் அதிருப்தி!

0
2

Kalaignar Centenary Bus Terminus எனப்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தங்கும் அறைகளுக்கான கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது வெளியூர் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் முக்கிய மையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் தங்கும் அறைகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தங்கும் அறைகளுக்கான கட்டணம் திடீரென ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்கனவே போக்குவரத்து வசதி குறைபாடு, குடிநீர் பிரச்னை, கழிப்பறை பராமரிப்பு குறைவு, போதிய அமர்வு வசதியின்மை போன்ற பல்வேறு அடிப்படை சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், கட்டண உயர்வு மேலும் சுமையாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வசதிகள் மேம்படுத்தப்படாமல் கட்டணத்தை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக குடும்பத்துடன் பயணம் செய்பவர்கள் மற்றும் முதியவர்கள் இந்த கட்டண உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில், “தங்கும் அறைகளில் போதிய சுத்தம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. இந்நிலையில் கட்டணத்தை உயர்த்தியிருப்பது நியாயமற்றது. முதலில் வசதிகளை மேம்படுத்தி பின்னர் கட்டண உயர்வு குறித்து பரிசீலிக்க வேண்டும்” என்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து, பயணிகளின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.