சபரிமலை வழக்கு: “மத மரபுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது” – உச்ச நீதிமன்றத்தில் சாய் தீபக்கின் அனல் பறக்கும் வாதம்!

0
3

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. “தெய்வத்தை எந்த முறையில் வழிபட வேண்டும் என்பதை முடிவு செய்வது பக்தரின் புனிதமான உரிமை” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், பந்தளம் அரச குடும்பத்திற்காக ஆஜரான வழக்கறிஞர் ஜே. சாய் தீபக்கின் வாதங்கள் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றுள்ளன.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு முன், சுமார் மூன்று மணி நேரம் நின்று வாதாடிய ஜே. சாய் தீபக், முன்வைத்த முதன்மையான கருத்துகள் இதோ, ஒரு மத நடைமுறை அதன் புனிதத் தன்மையால் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. அரசு அதைச் சட்டமாக மாற்றியது என்பதற்காகவே, அதன் பகுத்தறிவுத் தன்மையைச் சோதிக்க நீதிமன்றங்கள் சட்டத்தைப் பின்வாசல் வழியாகப் பயன்படுத்தக் கூடாது.

அரசியலமைப்பின் 25-வது பிரிவு தனிநபர் மத சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறது. ஆனால், 26-வது பிரிவு மத நிறுவனங்களின் (Religious Denominations) உரிமைகளைப் பாதுகாக்கிறது. சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரில் பிரிவு 26-ல் வழங்கப்பட்டுள்ள உள் மத மேலாண்மை உரிமைகளில் அரசு தலையிட முடியாது.

சமூக நலன் மற்றும் சீர்திருத்தத்தை ஒரு ‘ட்ரோஜன் குதிரையாகப்’ பயன்படுத்தி, மதப்பிரிவுகளின் தனித்துவமான வழிபாட்டு முறைகளைச் சிதைக்கக் கூடாது எனச் சாய் தீபக் எச்சரித்தார். சபரிமலை ஐயப்பனின் ‘நைஷ்டிக பிரம்மச்சாரி’ என்ற அடையாளமே வழிபாட்டின் மையம். இதனைச் சமத்துவக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பது வரலாற்றுக்கு முரணானது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறுக்கிடுகையில், “நிர்வாகத்தை விமர்சிக்கும்போது நீதித்துறை மறுஆய்வு அதிகாரம் தானாகவே வருகிறது. அதிகாரம் என்பதே இல்லை என்று சொல்வது கடினம்” என்றார். இதற்குப் பதிலளித்த சாய் தீபக், “நேரடியாகச் செய்ய முடியாததை மறைமுகமாகவும் செய்ய முடியாது” என்ற கொள்கையை வலியுறுத்தினார்.

மறுபுறம், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், “இது பாகுபாடு அல்ல, தெய்வத்தின் அடையாளத்தின் அடிப்படையிலான வகைப்பாடு. மற்ற 999 ஐயப்பன் கோவில்களில் இந்தப் பெண்களுக்குத் தடை இல்லை” என்பதைச் சுட்டிக்காட்டினார். நீதிபதி பி.வி. நாகரத்னா, இந்த வழக்கை ஐயப்ப பக்தர்கள் கொண்டு வரவில்லை, மாறாகக் கோவிலுடன் தொடர்பில்லாத ஒரு சங்கமே கொண்டு வந்தது என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.

ஏப்ரல் 7-ல் தொடங்கிய இந்த விசாரணை, இன்று (ஏப்ரல் 28) மீண்டும் தொடர்கிறது. மதச் சுதந்திரத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் இடையிலான இந்தப் போர், இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு புதிய திசையைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை வழக்கு: 3 மணிநேரம் வாதாடிய சாய் தீபக்! “மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது” – உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!