பெங்களூருவில் தன்னை நீதிபதி, போலீஸ் அதிகாரி எனப் பல அடையாளங்களில் காட்டி, பெண்களைத் தனது ஆசை வார்த்தைகளால் வீழ்த்தி, உல்லாசம் அனுபவித்து விட்டுப் பணம் பறித்து வந்த சந்திரேகவுடா என்ற போலி நீதிபதியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சினிமா ஒப்பனைக் கலைஞர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ராமநகர் கல்லூரி பேராசிரியர் எனக் கூறி சந்திரேகவுடா அந்தப் பெண்ணுடன் பழகியுள்ளார்.
அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது, அவருக்குத் தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணிடமிருந்து ரூ. 5 லட்சம் பணத்தைப் பறித்துள்ளார்.
சந்திரேகவுடாவைப் பிடித்து விசாரித்த போது, அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்திப் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது அம்பலமானது. ராமநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினராக இருந்த இவர், தன்னை நீதிபதி, காவல்துறை அதிகாரி மற்றும் பத்திரிகையாளர் எனப் பொய்யான அடையாளங்களைக் கூறி வந்துள்ளார்.
போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்திச் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளார்.
பெண்களிடம் ஆசைவார்த்தைகளை அள்ளி வீசுவதில் கில்லாடியான இவர், பல பெண்களைத் தனது வலையில் சிக்க வைத்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்திரேகவுடாவின் செல்போனை ஆய்வு செய்தபோது போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
அவரது போனில் ஏராளமான பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோ அழைப்புப் பதிவுகள் (Video Calls) இருந்தன. அவரிடமிருந்து போலி அடையாள அட்டைகள் மற்றும் சில பெண்களின் ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரேகவுடாவிடம், இன்னும் எத்தனை பெண்களை அவர் ஏமாற்றிப் பணம் பறித்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
