ஆட்டத்தை மாற்றும் ஆளுநர் அஜென்டா: மே 12 பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமியின் மெகா பிளான்!

0
2

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும், யார் அரியணை ஏறுவார் என்பதில் நிமிடம் ஒரு திருப்பம் ஏற்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) மெஜாரிட்டி இல்லாத சூழலில், அவர்களை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்பதில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக-விற்கு, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கைவசம் இல்லை. காங்கிரஸ் (5), சிபிஐ (4), சிபிஎம் (4) ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், ஐயுஎம்எல் மற்றும் அமமுக தவெக-விற்கு ஆதரவில்லையெனத் தெளிவாகக் கூறிவிட்டன.

அமமுக எம்.எல்.ஏ-வை விலைக்கு வாங்கத் தவெக முயற்சிப்பதாக டி.டி.வி. தினகரன் அளித்துள்ள புகார், ஆளுநரின் முடிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதை பாஜக விரும்பவில்லை என்றும், ஆளுநர் மூலம் பாஜக அரசியல் ஆட்டம் ஆடுவதாகவும் காங்கிரஸ் தரப்பில் புகார் எழுப்பப்பட்டுள்ளது.

தவெக-விற்கு மெஜாரிட்டி கிடைக்காத இந்தச் சூழலைப் பயன்படுத்தி, எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) அதிரடி காய் நகர்த்தல்களைத் தொடங்கியுள்ளார். வரும் மே 12-ஆம் தேதி ஈபிஎஸ்-இன் பிறந்தநாளை முன்னிட்டு, ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை நிகழ்த்த அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியைத் தவிர்க்கவும், தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்கவும் திமுக-வின் மறைமுக அல்லது வெளிப்படையான ஆதரவுடன் அதிமுக அரியணை ஏற வாய்ப்புள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. இதற்குப் பின்னணியில் ஆளுநரும் சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கவுள்ளதாகத் தெரிகிறது.

மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இன்று காலை வரை தேசிய ஊடகங்களின் கவனம் மேற்குவங்கத்தில் பாஜக படைக்கப்போகும் வரலாற்றுச் சாதனை மற்றும் பதவியேற்பு விழாவிலேயே இருக்கும். மதியத்திற்குப் பிறகே தமிழக அரசியல் நிலவரம் குறித்த விவாதங்கள் தேசிய அளவில் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசிக தனது இறுதி நிலைப்பாட்டை இன்று அறிவிக்கவுள்ள நிலையில், மே 12-க்குள் தமிழக அரசியலில் ஒரு பெரிய ‘பூகம்பம்’ வெடிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் பரிசாக ‘முதலமைச்சர்’ நாற்காலி அவருக்குக் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.