Home செங்கல்பட்டு ஏகாட்டூர் – ஆதிதிராவிடர் மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

ஏகாட்டூர் – ஆதிதிராவிடர் மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

0

திருப்போரூர் அடுத்த ஏகாட்டூர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, நிலமில்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.

ஏகாட்டூர் கிராமத்தின் ஜே.ஜே. நகர் பகுதியில் பெரும்பாலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலருக்கு சொந்த வீடு அல்லது நிலம் இல்லாததால், வாடகை வீடுகளில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சர்வே எண் 34/26-ல் 140 ஏக்கர் மற்றும் சர்வே எண் 37/1-ல் 1 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை தனியார் நிறுவனத்தினர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலமற்ற ஏழை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு நிலத்தை பிரித்து வழங்கி பட்டா வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேர்முக உதவியாளர் மற்றும் மனுதாரர் உள்ளிட்டோர் குறிப்பிட்ட தேதியில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தற்போது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலமற்ற மக்களுக்கு அரசு நிலங்களை உரிய முறையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்று வருகிறது.

NO COMMENTS

Exit mobile version