சேப்பாக்கத்தில் ‘ஒன் லாஸ்ட் டைம்’ தோனி? சிஎஸ்கே ரசிகர்களில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

0
3

Chennai Super Kings அணி இன்று Sunrisers Hyderabad அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் கடைசி ஹோம் போட்டியாக அமைந்துள்ள இந்த ஆட்டம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, MS Dhoni இந்த போட்டியில் களமிறங்குவாரா என்ற கேள்வியே சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படுகிறது.

இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே, 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் மீதமுள்ள இரு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அணி உள்ளது. அதனால் இன்றைய ஆட்டம் சிஎஸ்கேவுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த சீசன் முழுவதும் தோனி காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வு தேவைப்படுவதாக அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இருப்பினும், போட்டிக்கு முந்தைய நாட்களில் பயிற்சியில் ஈடுபடும் தோனி, போட்டி நாளில் அணியில் இடம்பெறாமல் இருந்து வருவது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற பயிற்சி அமர்வில் தோனி சுமார் 15 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. “அவருடன் பயிற்சி செய்வது சிறந்த அனுபவம்” என்று சிஎஸ்கே பந்துவீச்சாளர் Spencer Johnson தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற தோனி, அதன் பின்னரும் ஐபிஎலில் மட்டுமே விளையாடி வருகிறார். 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே அணியை சாம்பியன் பட்டம் வெல்லச் செய்த அவர், “என் கடைசி போட்டி சேப்பாக்கத்தில் இருக்கும்” என்று முன்பே கூறியிருந்தார். இதனால், இன்று நடைபெறும் போட்டி தோனியின் கடைசி சேப்பாக்கம் ஆட்டமாக இருக்குமா என்ற உணர்ச்சிமிக்க எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.