செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அருகிலுள்ள தொண்டமநல்லூர் ஊராட்சியின் தாதங்குப்பம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்த சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தப்படாத நிலையில், இறுதி சடங்குகளுக்காக செல்லும் மக்கள் மிகுந்த கஷ்டத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
மேலும், சுடுகாட்டில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் அங்கு செல்லுவது மிகவும் சிரமமாக உள்ளது. இதனுடன், குடிநீர் வழங்கும் குழாயும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அத்தியாவசிய தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்ததோடு, போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, சாலை, மின்விளக்கு மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.





