வைகை எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தம், தென் மாவட்ட ரயில் சேவை கடுமையாக பாதிப்பு!

0
2

 

செங்கல்பட்டு இரயில் நிலையம் அருகே அவசர ரயில்வே தண்டவாள பழுது பார்க்கும் மற்றும் பராமரிப்புப் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருவதால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி இயக்கப்படும் ரயில்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முக்கிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த வைகை விரைவு ரயில், செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் இரயில் நிலையம் அருகே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் அடியோடு நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதேபோல், செங்கல்பட்டு – விழுப்புரம் மற்றும் விழுப்புரம் – செங்கல்பட்டு ஆகிய இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ஒட்டுமொத்த ரயில் சேவைகளும் தற்காலிகமாக முடங்கியுள்ளன.

நீண்ட நேரமாக ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், அலுவலகம் மற்றும் அவசர மருத்துவத் தேவைகளுக்காகச் சென்னை செல்ல வேண்டிய பயணிகள் சிலர் ரயிலில் இருந்து இறங்கி, தண்டவாளத்தின் வழியே ஆபத்தான முறையில் நடந்து சென்று மாற்று வாகனங்கள் மூலம் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். இந்தத் திடீர் உள்கட்டமைப்புப் பழுதுகளால் சென்னை புறநகர்ப் பகுதிகளில் ரயில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ரயில் சேவை எப்போது முழுமையாகச் சீராகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் இருந்து பயணிகள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.