நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் காவலருக்கு சக காவலர்கள் காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்திய நிகழ்ச்சி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தேவி என்பவர் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர காவல் துறைக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ஒன்றரை ஆண்டுகளாக காவலராக பணிபுரிந்து வருகிறார். தேவி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளதால், மகப்பேறு விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல விண்ணப்பித்திருந்தார். ஊருக்கு செல்லும் முன் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் அவருக்கு ஆச்சரிய பரிசு ஒன்றை வழங்க முடிவு செய்தனர்.
இதன்படி பெண் காவலர்கள் அனைவரும் 7 வகை உணவுகளை சமைத்து, வளையல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் காவல் நிலையத்திற்கு வருகை தந்தனர். அங்கு தேவிக்கு காவலர்கள் அனைவரும் சேர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் ஜெயராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தம்பதியருக்கு கேக் வழங்கி வாழ்த்தினார். அத்துடன் அப்பகுதி மக்களும் காவலர் தேவியை வாழ்த்தி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.








