செங்கல்பட்டில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் மாணவர்கள் சில தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டில் இருக்கும் அரசு கூர்நோக்கு இல்லத்தில், சென்னை, வேலுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 36 மாணவர்கள் உள்ளனர். இதில், சிறப்பு பாதுகாப்பு பிரிவில், 12 பேர் உள்ளனர். இதில், ஒன்பது மாணவர்கள் நேற்று காலை சீர்திருத்த பள்ளி கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் ஏறி, குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
தகவலறிந்து, செங்கல்பட்டு காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இங்கு பணிபுரியும் 3 காவலர்களை மாற்ற வேண்டும், தங்களுக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும், வளாகத்தில் சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும் என, சிறுவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின், சிறுவர்கள் கீழே இறங்கி வந்தனர். இதையடுத்து, பிரச்சனை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
