தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக உமா மகேஸ்வரி பணியாற்றி வருகிறார். பள்ளிக் கல்வியில் நிகழும் சிக்கல்கள் குறித்தும் கல்வித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றியும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். அதேபோல கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்துப் பல்வேறு ஊடகங்கள் வழியாகப் பொது வெளியில் பேசி வருகிறார்.
மேலும், ஆசிரியர் உமா மகேஸ்வரி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் தொடர்ந்து பள்ளிக் கல்வி குறித்து எழுதி வருகிறார். இந்நிலையில், அரசு ஊழியர்கள் மத்தியில் உணர்ச்சிகளைத் தூண்டி பொதுமக்களின் அமைதியைக் குலைக்கும் விதமாக அவர் செயல்படுவதாகவும், இது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளுக்கு எதிரான செயல் என்றும் கூறி, அவரை பணியிடை நீக்கம் செய்வதாக செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
