செங்கல்பட்டு மாவட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட நெல்லுக்கு ஒரு மாதமாக பணம் வரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 28 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையங்களில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
அதே போன்று இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லாமல், கொள்முதல் செய்யப்பட்ட இடங்களிலேயே இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் கோடை மழை வந்தால் நெல் சேதம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, தங்களுக்கான பணத்தை விடுவிக்கவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.








