ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில், வாலிபரைக் கடித்த அதே நாகப்பாம்பு அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை வார்டுக்கே தேடி வந்த வினோதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டம், கொய்யல கவுடேனியைச் சேர்ந்தவர் சிவ சீனிவாஸ். நேற்று காலை இவர் தனது வீட்டில் இருந்தபோது, அங்கிருந்த நாகப்பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாக அவரைத் தாக்கியது. பாம்பு கடித்ததில் காயமடைந்த அவரை, உறவினர்கள் உடனடியாக மீட்டு ஜங்கா ரெட்டி குடேம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிவ சீனிவாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரவு 10 மணி அளவில் ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்தது. சிவ சீனிவாஸைக் கடித்த அதே நாகப்பாம்பு, அவர் சிகிச்சை பெற்று வந்த வார்டின் முன்பாக திடீரெனத் தோன்றியது.
வார்டு வாசலில் பாம்பைக் கண்ட மருத்துவமனை ஊழியர்களும், சிவ சீனிவாஸின் உறவினர்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனடியாகச் செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள், அந்தப் பாம்பை அங்கேயே அடித்துக் கொன்றனர்.
தன்னைக் கடித்த பாம்பை அடையாளம் கண்ட சிவ சீனிவாஸ் மற்றும் அங்கிருந்த மற்ற நோயாளிகள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கடித்த பாம்பே கடித்த நபரைத் தேடி மருத்துவமனைக்கு வந்ததாகப் பரவிய தகவலால் மருத்துவமனை வளாகமே சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.





