“விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன் – கதறி அழுத நடிகர் ரவி மோகன்

0
2

“என் குழந்தைகளைப் பார்க்க என்னை அனுமதிப்பதில்லை; பள்ளிக்குக் கூட பாடிகார்டுகளுடன் அனுப்புகிறார்கள். எனக்கு நடந்தது ஒரு பிளாக்மெயில் திருமணம், என்னை அடிமையாக வைத்திருந்தார்கள்” என்று நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) கண்ணீர் மல்க அளித்துள்ள பேட்டி ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர வைத்துள்ளது. விவாகரத்து கிடைக்கும் வரை இனி புதிய படங்களில் நடிக்கப் போவதில்லை என்கிற அதிரடி முடிவையும் அவர் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர ஹீரோக்களில் ஒருவரான ஜெயம் ரவி, சமீபத்தில் தனது பெயரை அதிகாரப்பூர்வமாக ‘ரவி மோகன்’ என்று மாற்றிக்கொண்டார். இவருக்கும் இவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்பக் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஆண்டு வெளியான இவர்களின் விவாகரத்து செய்தி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்தது. தற்போது இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் அனல் பறந்து வரும் வேளையில், ரவி மோகன் ஊடகங்களுக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டி கோலிவுட்டில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த ரவி மோகன், கட்டுக்கடங்காத அழுகையுடனும் வேதனையுடனும் தங்களுக்குள் இருந்த பல அதிர்ச்சி ரகசியங்களை உடைத்தார். “எனக்கு நடந்தது ஒரு பிளாக்மெயில் திருமணம்; அன்று கையை அறுத்துக்கொண்டு மிரட்டித்தான் என்னை அவர் திருமணம் செய்தார். இத்தனை ஆண்டுகள் என்னை ஒரு அடிமையாகவே வீட்டில் வைத்திருந்தார்கள். இப்போது என் சொந்தக் குழந்தைகளைக்கூடப் பார்க்க எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பள்ளிக்குக் கூட என் பிள்ளைகளைப் பாடிகார்டுகளுடன் அனுப்புகிறார்கள். தினமும் என் குழந்தைகளுடன் செஸ் விளையாடி, அவர்களின் மகிழ்ச்சிக்காக வேணுமென்றே அவர்களிடம் தோற்றுப்போகும் தகப்பன் நான்; எனக்குப் பாசமில்லையா?” என்று நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு அழுது கதறினார்.

இந்தக் குடும்பப் பிரச்சினையின் உச்சகட்டமாக, ரவி மோகன் தற்போது ஒரு அதிரடியான மற்றும் கடுமையான முடிவை அறிவித்துள்ளார். தனக்குத் சட்டப்பூர்வமாக விவாகரத்து கிடைக்கும் வரை இனி புதிய திரைப்படங்கள் எதிலும் ஹீரோவாக நடிக்கப் போவதில்லை என்றும், இதுவரை தான் நடித்து முடித்துள்ள படங்களைக்கூட இப்போது திரையரங்குகளில் வெளியிடப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தற்போது ஹீரோ அவதாரத்திலிருந்து தற்காலிகமாக விலகி, நடிகர் யோகி பாபுவை முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து ‘An Ordinary Man’ என்கிற திரைப்படத்தை ரவி மோகன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.