வண்டலூரில் திமுக ஒன்றிய செயலாளர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவரது டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த 56 வயதாகும் ஆராவமுதன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராகவும், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு துணை தலைவராகவும் பதவியில் இருந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி இரவு வண்டலூர் பெருமாள் கோவில் எதிரே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார்.
அப்போது 4 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியதுடன், ஆராவமுதனை வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை வழக்கில் கடந்த 1ஆம் தேதி சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் சரணடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடந்த 4ஆம் தேதி மேலும் 4 பேர் சரணடைந்தனர். சரணடைந்த சிறுவனை தவிர மற்றவர்களை ஓட்டேரி போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (19), வண்டலூர் ஸ்டாலின் தெருவை சேர்ந்த முகிலன் (21), வாணியம்பாடி பகுதியை சேர்ந்த தீபக்ஸ்ரீ ராம் (21) வண்டலூர் அருகே உள்ள கண்டிகை பகுதியை சேர்ந்த சேதுராமன் (21), ஆகிய 4 பேரை ஓட்டேரி போலீசார் கைது செய்தார்கள்.
வண்டலூரைச் சேர்ந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆராவமுதன் கொலை வழக்கில் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராகவும், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க மகளிர் அணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வரும் முத்தமிழ் செல்வி விஜயராஜ் (50), மற்றும் அவரது கார் டிரைவர் துரைராஜ் (37), ஆகிய இருவரையும் ஓட்டேரி போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
கட்சியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும், அதற்கு ஆராவமுதன் தான் காரணம் என்பதால், அவரை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக, முத்தமிழ் செல்வி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.








