காரணை கிராம மக்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு

0
2

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, உத்திரமேரூர் அருகே உள்ள காரணை கிராமத்தில் நெகிழி பயன்பாட்டை குறைத்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கீதா உதயகுமார் தலைமை தாங்கினார். தன்னார்வலர் நாகராஜன், உழவர் உற்பத்தியாளர் சங்க தலைவர் சோழனூர் ஏழுமலை, குணசேகரன் மற்றும் நசீர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனியார் தொண்டு நிறுவன மேலாளர் ஆனந்தகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் நெகிழி பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்றும், சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவில் கிராம மக்களுக்கு மஞ்சள் பைகள் வழங்கப்பட்டு, பசுமையான மற்றும் தூய்மையான சூழலை உருவாக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.