தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் உள்ள 13 சீட்டுகளுமே ஜோக்கர்களாகவே உள்ளன. இந்த அரசின் முதலமைச்சர் விஜய் அல்ல, ஆதவ் அர்ஜுனா தான் பின்னாலிருந்து நிழல் முதலமைச்சராக இந்த அரசை இயக்கிக் கொண்டிருக்கிறார்” என்று திமுக முன்னாள் அமைச்சரும், அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் கடுமையாக சாடியுள்ளார். அரியலூரில் இன்று நடைபெற்ற மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
இந்தத் தேர்தல் தோல்வி, மிகக் குறிப்பாகக் கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட சரிவு திமுகவினரின் ஆழ்மனதில் மாறா வடுவாகப் பதிந்துள்ளது. ‘இப்படிப்பட்ட ஒருவரை (ஸ்டாலினை) முதலமைச்சராகத் தவறவிட்டு விட்டோம்’ என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியிலும் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
தவெக-வினரிடம் முறையான கட்சி அமைப்பு இல்லாததால் தான், தற்பொழுது அதிமுகவில் இருப்பவர்களை வலைவீசிப் பிடித்துக் கொண்டு போய் சேர்க்கிறார்கள். குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய் தருவது போல, இணையத்தில் இனிப்பாகப் பேசி வந்த ‘இன்புளுயன்சர்களை’ தவெக விலைக்கு வாங்கி, திமுகவுக்கு எதிரான செய்திகளைப் பரப்பி ஒரு மாயையான ‘குறைப்பிரசவ வெற்றியைப்’ பெற்றுள்ளனர். இந்த ஆட்சி மாற்றம் நீர்க்குமிழி போல விரைவில் வெடிக்கும்; இணையம் மூலம் ஏறிய தவெக-வின் கிராஃப் தற்பொழுது அதே வேகத்தில் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது.
தவெக அரசு அறிவிக்கும் திட்டங்கள் யாவும் ஏற்கனவே திமுக அறிவித்த திட்டங்களின் பெயர் மாற்றமே. தற்போதைய தவெக அமைச்சரவையில் 13 சீட்டுமே ஜோக்கர் போலத்தான் உள்ளது. இதில் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் மட்டும்தான், அவராலும் நீண்ட நேரம் எழுந்து பதில் சொல்ல முடியாது. அமைச்சர்களுக்கு இரண்டு மாதம் பேசுவதற்காவது விஜய் பயிற்சி தந்திருக்கலாம். நாம் பார்க்காத தோல்வி அல்ல, 10 ஆண்டு காலம் எதிர்க்கட்சியாக இருந்து உழைத்து மீண்டவர்கள் நாம்; இந்தக் குறுக்கு வழி அரசியலை முறியடித்து மீண்டும் வெல்வோம்.
எஸ் எஸ் சிவசங்கர் பேட்டி, அரியலூர் திமுக செயற்குழு கூட்டம், நிழல் முதலமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தவெக அமைச்சரவை விமர்சனம், கொளத்தூர் தொகுதி தோல்வி திமுக, SS Sivasankar Ariyalur speech 2026, Aadhav Arjuna shadow CM issue, TVK cabinet criticism Tamil.





