செங்கல்பட்டு நெல் கொள்முதல் மையங்களில் 17 லட்சம் கோணிப்பைகள் வரவழைப்பு

0
2

செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் கொள்முதல் மையங்களில் தேங்கிக் கிடக்கும் நெற்க்களை விரைந்து கொள்முதல் செய்யும் நடவடிக்கையாக, மேற்கு வங்க மாநிலத்திலிருந்து 17 லட்சம் கோணிப்பைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்ததன் காரணமாக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அதிக அளவில் நெல் வரத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், தேவையான அளவு கோணிப்பைகள் இல்லாததால் பல மையங்களில் நெல் மூட்டைகள் குவிந்து தேக்கம் ஏற்பட்டதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இதனால், மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக நெல் சேதமடையும் அபாயமும் நிலவியது.

இந்த பிரச்சினையை சமாளிக்க தமிழக அரசு அவசர நடவடிக்கையாக மேற்கு வங்கத்திலிருந்து 17 லட்சம் கோணிப்பைகள் வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளது. தற்போது அந்த கோணிப்பைகள் மாவட்டத்தின் பல்வேறு நெல் கொள்முதல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அதிக அளவில் நெல் குவிந்துள்ள மையங்களுக்கு முன்னுரிமை அளித்து விநியோகம் நடைபெறுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “விவசாயிகளின் நெல் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கோணிப்பைகள் பற்றாக்குறை விரைவில் முழுமையாக சரிசெய்யப்படும்,” என தெரிவித்தனர்.

இதனால், நீண்ட நாட்களாக காத்திருந்த விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.