செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பியிருந்தாலும், அது தற்போது வரை கிடப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலூர், தாம்பரம் மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட தாலுகாக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாக்களில் அதிகமான கிராமங்கள் உள்ளதால் பொதுமக்கள் சான்றிதழ்கள் மற்றும் நில ஆவண பணிகளுக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
அச்சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக 50 கிலோமீட்டர் தூரம் உள்ள மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.
மேலும், போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், இரும்புலி உள்ளிட்ட பகுதிகளின் மக்கள் கூட 25 கிலோமீட்டர் தூரம் உள்ள செய்யூர் தாலுகாவிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதனால் மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாக்களில் உள்ள சில கிராமங்களை பிரித்து, அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த கோரிக்கையை தமிழக முதலமைச்சர் விஜய் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு கிராமப்புற மக்களிடம் அதிகரித்துள்ளது





