தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்திய தவெகவுக்கு ஆதரவு விவகாரத்தை முன்னிட்டு, சென்னையில் நடைபெற இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) உயர்நிலைக் குழுக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் 108 எம்எல்ஏக்களை பெற்ற தவெக, தனித்து ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை. இதனால், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரி கடிதம் அனுப்பியது. இதற்கு பதிலளித்த காங்கிரஸ், 5 எம்எல்ஏக்களுடன் நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அளித்து கடிதம் வழங்கியது.
ஆனால், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்ந்தபடியே தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது, கூட்டணியின் தலைமைக்கட்சியான திமுகவின் கடும் எதிர்ப்பை சந்தித்தது. காங்கிரசின் இந்த நடவடிக்கை துரோகம் என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த அரசியல் பதற்றமான சூழலில், தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்க விசிக உயர்நிலைக் குழுக் கூட்டம் மே 7ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுகவின் எதிர்வினை மற்றும் அரசியல் நிலைமையின் மாற்றங்களை கருத்தில் கொண்டு, அந்த கூட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக விசிக தலைமையகம் அறிவித்துள்ளது.
மேலும், கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கட்சியின் நிர்வாகிகள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தவெகவுக்கு விசிக ஆதரவு அளிப்பது குறித்து இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படாமல் இருப்பது அரசியல் வட்டாரங்களில் மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.





