180 சிறுமிகள் சீரழிப்பு – மகாராஷ்டிராவில் ஒரு பொள்ளாச்சி சம்பவம் – பெற்றோர் அதிர்ச்சி

0
7

மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் காதல் வலை வீசி 180 சிறுமிகளை ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு, தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.

பரத்வாடா நகரைச் சேர்ந்த 19 வயது முகமது அயாஸ் என்கிற தன்வீர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டு பள்ளி, கல்லூரி மாணவிகளுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளார். அவர்களின் நம்பிக்கையை பெற்ற பின்னர் காதல் பெயரில் நெருங்கி, மும்பை, புனே போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அங்கு சென்ற சிறுமிகளை நயவஞ்சகமாக பேசி, அவர்களிடம் அந்தரங்கமான வீடியோக்கள் பதிவு செய்துள்ளார். சில நேரங்களில் அவர்களுக்கு தெரியாமலேயே ரகசியமாக வீடியோக்கள் எடுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி, தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் சிலரை பாலியல் தொழிலில் தள்ளியதாகவும், சிலரிடம் மதம் மாற்றம் செய்ய அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் சமூக அவமானம் மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற பயத்தால் புகார் அளிக்க தயங்கியுள்ளனர்.

இந்த தகவலை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை கைது செய்துள்ளனர். அவரது மொபைலில் 350-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது தொடர்புகள் மற்றும் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது நடைபெறும் சைபர் குற்றங்கள் குறித்து மீண்டும் கவலை எழுப்பியுள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தைப் போலவே, நம்பிக்கையை ஆயுதமாக்கி இத்தகைய குற்றங்கள் நடைபெறுவது சமுதாயத்திற்கு பெரிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.