எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்குத் தடை விதிக்க வேண்டி நீதிமன்றத்தில் மனு!

0
5

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரத்திற்குத் தடை விதிக்கக் கோரி, முன்னாள் அதிமுக நிர்வாகி பெங்களூரு புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பெங்களூரு புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுவில், எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரங்களின் போது கண்ணியமற்ற முறையில் பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்துக்கள் மிகவும் தரம் தாழ்ந்தவை என மனுவில் கூறப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடந்த கால நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, “அப்பவே மேலோகத்திற்குப் போயிருக்கணும்” என்பது போன்ற ‘பஞ்ச்’ டயலாக் பேசி உயிரை வாங்குவதாக எடப்பாடி விமர்சனம் செய்துள்ளதை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உடல்நலம் குறித்து இழிவாகப் பேசுவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும், இதனால் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பெங்களூரு புகழேந்தி தொடர்ச்சியாகப் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார். தற்போது தேர்தல் நேரத்தில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகள் வரம்பு மீறிச் செல்வதாகக் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த நீதிமன்ற மனு அந்த விவாதத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அவதூறு பேச்சுகள் குறித்துக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ள நிலையில், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கும் என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.