அரசுப் பேருந்தில் உயிரிழந்த பயணி – மனிதாபிமானத்தை இழந்த ஓட்டுநர், நடத்துனர்

0
4

அரசுப் பேருந்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நபரின் சடலத்தோடு அவருடன் பயணித்த இருவரையும் நடுவழியில் இரவில் இறக்கிவிட்ட தற்காலிக ஓட்டுநரை பணி நீக்கமும், நடத்துநரை பணியிடை நீக்கமும் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பீமாமண்டாவி (60), அசோக்குமார் ஓயான் (19) கஜுனுகொடோபி (20) ஆகிய மூன்று பேரும் விக்கிரவாண்டியில் தீவன நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் மூவரும் சென்றுள்ளனர். அப்போது செங்கல்பட்டு அருகே வந்தபோது, பீமாமண்டாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு பேருந்திலேயே இறந்துள்ளார்.

இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றவர்களை செங்கல்பட்டு மேம்பாலத்திற்கு அருகில் இரவு என்று கூடபாராமல் இறந்த பீமாமண்டாவி (60) மற்றும் அவரது இரு பேரன்களான அசோக்குமார் ஓயான் (19) கஜுனுகொடோபி (20) ஆகிய மூவரையும் நடுவழியில் அரசுப் பேருந்தின் தற்காலிக ஓட்டுநர் ராம்குமார் மற்றும் நடத்துநர் ரசூல் ரகுமான் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

அதன்பின்பு தாத்தாவின் உடலை இரு பேரன்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவ்வழியாக வந்தவர்களின் உதவியால் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடுவழியில் இறக்கி விட்டுச் சென்ற நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை பரிந்துரை செய்தனர்.

அந்த பரிந்துரையின் பேரில் விழுப்புரம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் குணசேகரன், சடலத்துடன் பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட தற்காலிக ஓட்டுநர் ராம்குமாரை பணி நீக்கமும் நடத்துநர் ரசூல்ரகுராமனை பணியிடை நீக்கமும் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.