விஜய் – இபிஎஸ் கூட்டணி? லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ் பேட்டியால் அரசியலில் பரபரப்பு!

0
1

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், தமிழக அரசியலில் ஒரு புதிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸின் பேட்டி. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே ஆட்சி அமைப்பது குறித்து ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ், தேர்தல் பிந்தைய கூட்டணி குறித்துப் பேசுகையில் மிகவும் துணிச்சலாக ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் ஆட்சி அமைப்பது தொடர்பாகத் தவெக தலைவர் விஜய் அவர்களுடன் எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடியார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது குறித்த சுப செய்தி விரைவில் வரும்.

பேட்டியின் இறுதியில், “யார் என்ன சொன்னாலும், கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி அமைப்பார்” எனக் கூறி ஒட்டுமொத்த அரசியலரங்கையும் அதிர வைத்துள்ளார்.

தவெக 108 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், அதிமுக 80 இடங்களைப் பெற்றுள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் இணைந்தால் 188 இடங்களுடன் மிக வலுவான ஆட்சியை அமைக்க முடியும். திமுகவைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அதிமுக மற்றும் தவெக கைகோர்க்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

108 இடங்களைப் பெற்றுள்ள விஜய் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பாரா அல்லது அதிமுகவின் ஆதரவுடன் துணை முதலமைச்சர் பதவியை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. லீமா ரோஸின் பேட்டி, அதிமுக தரப்பு முதலமைச்சர் பதவியில் மிக உறுதியாக இருப்பதைக் காட்டுகிறது.

ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது அதிமுக எம்.எல்.ஏ-வின் இந்தப் பேச்சு திமுக தலைமைக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், அதிமுக மற்றும் தவெக இணைந்தால் அது திமுகவின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

லீமா ரோஸின் இந்தப் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தவெக தரப்பிலிருந்து இதுவரை இதற்கு எவ்வித அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை. 108 இடங்களைப் பெற்றுள்ள விஜய், இபிஎஸ்-ஐ முதலமைச்சராக ஏற்பாரா? அல்லது “ஆட்சியில் பங்கு” என்ற அடிப்படையில் புதிய சமன்பாடு உருவாகுமா?