வடபட்டினம் தார்சாலை சேதம்: புதிய சாலை அமைக்க கோரிக்கை

0
2

கூவத்தூர் அருகே உள்ள வடபட்டினம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த தார்சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடபட்டினம் ஊராட்சியில் காட்டு காலனி, பழைய நடுக்குப்பம் மற்றும் வடபட்டினம் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன.

இதில் மீனவ கிராமமான பழைய நடுக்குப்பத்தில் மதுரை வீரன் தெரு, சிங்காரவேலர் தெரு, விவேகானந்தர் தெரு, பாப்பாத்தியம்மன் தெரு உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட தெருக்களில் சுமார் 150 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள பாபு ரெட்டியார் தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சேதமடைந்த சாலையால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் தினமும் அவதியடைந்து வருகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லவும் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

எனவே, ஊராட்சி நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.