“நகை, பணத்தைப் பறிச்சுட்டு கொடூரம்!” தூத்துக்குடியில் இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை..!

0
6

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மாணவி வழக்கில் குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அதனை முதலமைச்சர் விஜய் வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்த இதே நாளில், தூத்துக்குடியில் மற்றொரு இளம்பெண்ணைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்து நகை, பணத்தைப் பறித்த புகாரில் மூன்று பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி பாத்திமா நகர் காரிடாரில் வசித்து வரும் ஒரு இளம்பெண்ணை, மர்ம நபர்கள் சிலர் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதுமட்டுமன்றி, அந்தப் பெண்ணிடமிருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தையும் அவர்கள் பறித்துக் கொண்டு தப்பியோடினர். இக்கொடூரச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த உத்தியோகபூர்வப் புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் களமிறங்கியது.

காவல்துறையினர் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில், இக்குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட பாத்திமா நகரைச் சேர்ந்த மோஹித், ரித்தீஷ் மற்றும் திலோத் பெர்லின் ஆகிய மூவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவனான மோஹித் என்பவன், பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணிற்கு ஏற்கனவே பழக்கமான அறிமுகமான நபர் என்பது தெரியவந்துள்ளது.

புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டி.எஸ்.அன்பு ஐபிஎஸ் பொறுப்பேற்றுள்ள சூழலில், குற்றவாளிகளுக்கு எதிராகத் தூத்துக்குடி காவல்துறை இந்த அதிரடி ஆக்‌ஷனை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தவெக அரசு மற்றும் காவல் துறை கடுமையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள வேளையில், தூத்துக்குடியில் அரங்கேறியுள்ள இந்த அடுத்தடுத்த விபரீத சம்பவங்கள் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.