திருப்போரூர் காவல் நிலையத்திற்கு போலீசார் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூரில் இ6 காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, ஆய்வாளர் அறையாக செயல்படும் பழைய கட்டிடம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 1,200 சதுர அடி பரப்பளவில் கட்டுவதற்கு ஆங்கிலேய போலீஸ் சூப்பிரண்டு ஏ.பி., அகர் ஸ்கொயர் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில், மேற்கூரை ஓடுகள், தேக்கு மரக் கட்டைகளும் அப்படியே இருக்கின்றன. தற்போது ஆய்வாளர் அறை பகுதி மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
போதிய இடவசதி இல்லாததால், 2004ஆம் ஆண்டு, தற்போதுள்ள பழைய கட்டடத்திற்கு பின்புறம், புதிய கட்டிடம் கட்டப்பட்டு உதவி ஆய்வாளர் அறை, பதிவு அறை உட்பட முதல் தளத்தில் ஒய்வு அறையுடன் உள்ளன. காவல் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு 117வது ஆண்டை கொண்டாடும் விதமாக திருப்போரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் கேக் வெட்டினார். இதில், மற்ற காவலர்களுடன் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








