திருப்போரூர் அருகே உள்ள தண்டலம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் மதுபான கிளப்பை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தண்டலம் கிராமத்தின் ஓ.எம்.ஆர் சாலையில் தனியாருக்கு சொந்தமான மனமகிழ் மன்றம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்தில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், இந்த மதுபான கிளப் தண்டலம் ஊராட்சி பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலும், தனியார் பள்ளி ஒன்றிலிருந்து 200 மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கு வரும் மதுப்பிரியர்கள் தங்களது வாகனங்களை ஓ.எம்.ஆர் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு செல்வதால், முக்கிய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் நிலவுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, தண்டலம் கிராம மக்கள் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் ஆறுமுகம், பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மதுபான கிளப்பை மூட உரிய பரிந்துரை செய்யப்படும் என்று உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
