வங்கக் கடலில் வலுவாகும் காற்று சுழற்சி… தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

0
1

வங்கக் கடல் மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல காற்று சுழற்சிகள் காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக கடலோரத்தை ஒட்டி நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 100 மிமீ மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 38 மிமீ மழை பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை நிலவி வருகிறது.

தற்போது தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையிலான மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதியில் காற்று சுழற்சி நீடித்து வருகிறது. அதேபோல் மாலத்தீவு அருகே அரபிக்கடலில் உருவாகியுள்ள மற்றொரு காற்று சுழற்சியும் வலுப்பெற்று வருகிறது. இந்த இரு காற்று சுழற்சிகளும் இணையும் வாய்ப்பு இருப்பதாக வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் தாக்கத்தால் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, கோவை, திருப்பூர், நீலகிரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் மதியத்திற்குப் பிறகு மழை தீவிரமாக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

மேலும், தென் மாவட்ட கடலோர பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த வானிலை மாற்றம் தமிழகத்தை நெருங்கி வருவதால் அடுத்த சில நாட்கள் மழை தொடரும் சூழ்நிலை நிலவுகிறது.