நாகேஸ்வரி அம்மனுக்கு 365 பால்குட அபிஷேகம்: சித்ரா பௌர்ணமி விழா கோலாகலம்!

0
3

சென்னை மேற்கு தாம்பரம், முத்துரங்கம் பூங்காவில் அமைந்துள்ள அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் கோவிலில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டுச் சிறப்பு வழிபாடுகள் மற்றும் 365 பால்குட அபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி நேற்று காலை முதலே கோவிலில் ஆன்மீக நிகழ்வுகள் களைகட்டின.காலை 6:00 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க விழா தொடங்கியது; அதனைத் தொடர்ந்து 6:15 மணிக்குக் கோ பூஜை மற்றும் கணபதி ஹோமம் ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டன. பழைய தாம்பரம் குளக்கரை பகுதியில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் 365 பால்குடங்களை ஏந்தி ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம் நாகேஸ்வரி அம்மன் கோவிலைச் சென்றடைந்தது; அங்கு அம்மனுக்குப் பால்குடங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவின் நிறைவாக இரவு 7:00 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் வீதி உலா நடைபெற்றது. தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு, அம்மனை மனமுருகத் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.