தமிழ்ப் பேராயம் விருது பெறுவதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை அனுப்புமாறு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனத்தில், தமிழ்ப்பேராயம் செயல்பட்டு வருகிறது. அதன் சார்பில், சிறந்த தமிழ் புத்தகங்கள், சிறந்த தமிழ் இதழ், சிறந்த தமிழ்ச்சங்கம், அறிஞர்கள் ஆகிய பிரிவுகளின் கீழ், 12 விருதுகள், 2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 2024ம் ஆண்டுக்கான விருதுகள் பெற தகுதியான நபர்களிடமிருந்து, பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
விருதுகளுக்கு உரிய புத்தகங்கள், 2021 – 23ஆம் ஆண்டுகளில், முதல் பதிப்பாக வெளி வந்திருக்க வேண்டும். 2024ஆம் ஆண்டு வந்த புத்தகங்கள் தகுதி பெறாது. தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு, 20,000 வழங்கப்படும். தமிழிசை மற்றும் நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் குழுவுக்கு, அருணாசல கவிராயர் விருது வழங்கப்படும்.
பாரிவேந்தர் பைந்தமிழர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் தமிழறிஞர்கள், செய்த தமிழ் பணிகள், பெற்ற பட்டங்கள், எழுதிய நுால்களின் பட்டியல் உள்ளடக்கிய தகவல்களை பரிந்துரை கடிதத்துடன் அனுப்ப வேண்டும். இந்த விருதுக்கான பரிந்துரையை, உரியவரோ மற்றவர்களோ அனுப்பலாம். எந்த நாட்டை சேர்ந்த தமிழறிஞர்களும், மேற்கண்ட விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பரிந்துரைகள் மற்றும் நுால்களை தலைவர், தமிழ் பேராயம், வேந்தர் கலையகம் முதல் தளம், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், காட்டாங்கொளத்துார். என்ற முகவரிக்கு, மே 31ஆம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும் என, தமிழ்ப்பேராயம் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.








