சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய பகுதியாக விளங்கும் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஜி.எஸ்.டி (GST) சாலையில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர் மூன்று நாட்கள் விடுமுறை, கோடை விடுமுறை மற்றும் நாளை கொண்டாடப்படவுள்ள சித்ரா பௌர்ணமி ஆகியவற்றின் காரணமாக, சென்னையிலிருந்து மக்கள் பெருமளவில் தென் மாவட்டங்களுக்கும், யாத்திரை மையங்களுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியான விடுமுறை காரணமாக, பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். குறிப்பாக, திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சாலை போக்குவரத்து அதிகமாகியுள்ளது.
இந்நிலையில், இருசக்கர வாகனங்கள், மூன்றுசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் ஒரே நேரத்தில் நகர்ந்ததால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவித்தனர். குறிப்பாக, செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போலீசார் தீவிரமாக பணியில் ஈடுபட்டு, வாகனங்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். இருப்பினும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நெரிசல் உடனடியாக குறைய வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், மாற்று சாலைகளை பயன்படுத்தவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பயணிக்கும் முன் போக்குவரத்து நிலவரத்தை அறிந்து செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





