அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!

0
2

பிரபல மூத்த திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன், சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 85 வயதான அவர் இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவராக வலம் வந்தவர் கே.ராஜன். எப்போதும் பொதுமேடைகளில் துணிச்சலாகப் பேசிப் பரபரப்பை ஏற்படுத்தும் இவர், இன்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆற்றில் முதியவர் ஒருவர் குதித்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் அடையாறு போலீசார் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது உடலைச் சடலமாக மீட்டனர். அதன் பின்னரே அது தயாரிப்பாளர் கே.ராஜன் என்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த 1983-ஆம் ஆண்டு ‘பிரம்மச்சாரிகள்’ படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான கே.ராஜன், கடந்த சில வாரங்களாகத் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரைத்துறையினரைக்கூடத் தொடர்பு கொள்ளாமல் முற்றிலும் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 85 வயதில் அவர் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது குறித்து அடையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் கம்பீரமாகப் பேசும் ஒரு மூத்த கலைஞர் இப்படி உயிரை மாய்த்துக் கொண்டது ஒட்டுமொத்தக் கோலிவுட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.