சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் (49) மற்றும் அவரது மனைவி மல்லீஸ்வரி (46). நேற்று முன்தினம் இருவரும் மேடவாக்கம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் நூக்கம்பாளையம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் சென்ற டூவீலர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மல்லீஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சீனிவாசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மல்லீஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் அதன் ஓட்டுநர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
