பரனூர் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலித்ததர்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் நிர்வாகி, கண்ணாடியில் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் மே 18 படுகொலை நாள் தமிழ் பேரின எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பொதுக்கூட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து, மறைமலைநகரில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி புறப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் சென்றபோது FasTag மூலம் தானாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நிர்வாகி, “எப்படி எனது காரிலிருந்து பணம் எடுக்கலாம்” என கூறி, பரனூர் சுங்கச்சாவடி பூத் எண் 7-ல் இருந்த கண்ணாடியை கையால் உடைத்ததாக கூறப்படுகிறது. இதில், உடைந்த கண்ணாடி துண்டு வெட்டி, அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியேறியது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவிக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர், சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், உடைக்கப்பட்ட பூத் கண்ணாடியையும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்ததாவது: “மறைமலைநகரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்திற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கட்சி கொடி கட்டிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் Fastag செயல்பாட்டில் இருந்தால் தானாகவே கட்டணம் பிடிக்கப்படும்,” என விளக்கம் அளித்தனர்.
இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.





