Home செங்கல்பட்டு 1000 ஆண்டுகள் பழமையான பொற்சோதிநாதர் கோயில் கும்பாபிஷேகம்

1000 ஆண்டுகள் பழமையான பொற்சோதிநாதர் கோயில் கும்பாபிஷேகம்

0

உத்திரமேரூர் அருகே ஒழையூர் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீ பொற்சோதிநாதர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக கோயில் வளாகத்தில் வாஸ்து ஹோமம், சாந்தி ஹோமம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனை ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்ததையடுத்து, மேளதாளங்கள் முழங்கவும், வானவேடிக்கைகள் ஒலிக்கவும், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கவும் புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

பின்னர், கோயில் விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version