மறைமலைநகர் அருகே ரயில் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செங்கல்பட்டு – தாம்பரம் ரயில்வே தடத்தில் உள்ள பொத்தேரி ரயில் நிலையம் அருகே நடைபெற்றுள்ளது.
தைலாவரம் ரயில்வே கேட் அருகே ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உயிரிழந்தவர் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த முத்தரசன் என அடையாளம் காணப்பட்டார். அவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த ரயில் மோதி உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே தண்டவாளங்களை அங்கீகரிக்கப்படாத இடங்களில் கடக்க வேண்டாம் என்றும், பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் ரயில்வே போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
